Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 November 2021

உலக நாடுகளை அலற வைக்கும் புதிய வகை கொரோனா


உலகமெங்கும் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ‘ஒமைக்ரான்’ மிகவும் மோசமானது என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


“கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்தவொரு வைரசும் உருமாறுவது இயல்புதான், அதற்காக இப்படியா?” என்று உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளை அலற வைத்திருக்கிறது புதிதாக தோன்றியுள்ள உருமாறிய வைரஸ்.

அது மட்டுமல்ல, உலக நாடுகளின் பங்குச்சந்தைகளையெல்லாம் ஒரே நாளில் சரிவை சந்திக்க வைத்திருக்கிறது. இந்த புதிய வைரசுக்கு பெயர் பி.1.1.529 என்பதாகும்.

இந்த வைரசின் தாயகம், தென் ஆப்பிரிக்கா. அங்குதான் முதன்முதலாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது

இதுவரை உலகமெங்கும் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் இதுதான் மிக மோசமானது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். நோய் எதிர்ப்புச்சக்தியை தவிர்க்கும் தன்மையை இந்த வைரஸ் கொண்டிருப்பதுதான் மருத்துவ அறிவியல் சமூகத்தை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பெரிய அளவில் வேலை செய்து விடாது. நிச்சயமாக குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித். இது அதிவேகமாக பரவும் என்றும் எச்சரிக்கிறார் இவர்.

இது நம்ப முடியாத அளவுக்கு உருமாறி உள்ளது, அசாதாரணமான பிறழ்வுகளின் மண்டலமே உள்ளது, இது தற்போது பரவி வந்துள்ள வைரஸ் வகைகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது என்கிறார், தென் ஆப்பிரிக்காவின் தொற்றுநோய் பதிலளிப்பு மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா.

இந்த திரிபு எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது, இது பரிணாம வளர்ச்சியில் மிகப்பெரும் பாய்ச்சலைக் கொண்டுள்ளது, நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளை கொண்டிருக்கிறது என்று வியக்கிறார் இவர்.

இந்த உருமாறிய வைரசில் 50 மரபணு பிறழ்வுகள் இருக்கின்றனவாம். வைரசின் ஸ்பைக் புரதத்தின் இடையே மட்டுமே 30-க்கும் அதிகமான பிறழ்வுகள் உள்ளனவாம். பொதுவாக தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழைகளைத்தான் குறி வைக்கின்றன. மனித உடல்களுக்குள் ஊடுருவ கொரோனா வைரஸ் இந்த புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றன.

காகிதத்தில் பயங்கரமாக தோன்றிய உருமாறிய வைரஸ்கள் பல உண்டு. பீட்டா வைரஸ் அப்படிப்பட்ட ஒன்றாக மக்களை கவலையில் ஆழ்த்தியது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தப்பிப்பதில் இது சிறந்தது. ஆனால் இதையெல்லாம் கடந்து யதார்த்தத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா வைரஸ்தான் உலகை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த புதிய வைரஸ் அதிவேகமாக எந்த அளவுக்கு பரவும், கொடூரமானதா, தடுப்பூசிகள் கண்டுபிடித்தது பலன் அளிக்குமா என்பதையெல்லாம் ஆய்வக ஆய்வுகள்தான் சொல்லும். அதற்காக பொறுத்திருக்க வேண்டும்.

இந்த வைரசால் முதலில் விழித்துக்கொண்டுள்ள நாடு இங்கிலாந்து என்று சொல்ல வேண்டும். இங்கிலாந்து சுகாதார முகமையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ், இதுவரை நாம் பார்த்ததில் கவலை அளிக்கிற வைரஸ் இதுதான். இந்த வைரஸ் முதன்முதலாக காணப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் கவுடெங்கில் ‘ஆர் வேல்யூ’ என்று சொல்லப்படுகிற இதன் பரவல் விகிதம் 2 ஆக உள்ளது. இது உண்மையிலேயே மிகவும் அதிகம் என்றும் இவர் சொல்கிறார்.

இதன் காரணமாக இங்கிலாந்தில் இப்போது வாரத்துக்கு 50 ஆயிரம் வைரஸ் கேஸ்களை மரபணு வரிசைப்படுத்தி சோதிக்கிறார்கள், இது அதிகபட்ச எண்ணிக்கை என்பதுவும் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தகவல்.

இந்த வைரஸ் பரவல் தடுப்பதற்காக தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசொத்தோ, எஸ்வாத்தினி ஆகிய 6 நாடுகளின் விமானங்களை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி விட்டது.

புதிய உருமாறிய வைரஸ் மிகவும் கவலை அளிக்கிறது, இதனால்தான் தென் ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களை தடை செய்திருக்கிறோம் என்று இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தைப் போன்று ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து வருகிற விமானங்களை நிறுத்த ஐரோப்பாவும் விருப்பம் வெளி யிட்டுள்ளது. இதுபற்றி ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறும்போது, “ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து வருகிற விமான பயணங்களை நிறுத்த அவசரகால தடையை செயல்படுத்தலாம் என முன்மொழிகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பற்றி ஆலோசிக்க, விவாதிக்க உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியது. நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமைக்ரான்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களையும், இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி உள்ளது




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES