Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

15 November 2020

மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021

குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை)
மேஷம்: குரு பெயர்ச்சி 2020 - 2021






அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சி
பொது : இதுநாள் வரை குருவின் பார்வை பலத்துடன் செயல்பட்டு வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சற்று அலைச்சலைத் தரக்கூடும். அலைச்சல் அதிகமானாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமே. கேதுவை நட்சத்திர அதிபதி ஆகவும், செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு குருவின் மகர ராசி சஞ்சாரம் தொழிலில் வளர்ச்சியான பலன்களையே தரும்.

நிதி : தன ஸ்தானத்தின் மீது விழும் குருபகவானின் பார்வை சேமிப்பினை உயர்த்தும். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனங்களை புதிதாக மாற்ற நினைப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது நல்லது. தனியார் நிதி நிறுவனங்கள், சிட்பண்ட்ஸ் ஆகியவற்றில் அதிக எச்சரிக்கை தேவை. ஆன்மிகச் செலவுகள், தான தர்ம செலவுகள் கூடும்.

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் சலசலப்புகள் குறையும். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு காணாமல் போகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். பணி நிமித்தமாக குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் குறையும்.

கல்வி : பொதுஅறிவு அதிகரிக்கும். ஞாபகசக்தியை கூட்டும் வகையில் மனப்பாடப் பயிற்சியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வேகமாக எழுதும் கலையில் கூடுதல் பயிற்சி தேவை. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஆசிரியர்களிடம் நற்பெயர் காண போராட வேண்டியிருக்கும். உயர்கல்வி மாணவர்கள் வித்தியாசமான துறைகளில் மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள்.

பெண்கள் : குடும்பப் பிரச்னைகளில் முன்னின்று செயல்படுவீர்கள். கணவரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. முக்கியமான விவகாரங்களில் உங்கள் வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் கவனத்துடன் பேசவேண்டியது அவசியம். உறவினர்கள் மத்தியில் நன்மதிப்பினைப் பெறுவீர்கள்.

உடல்நிலை : ரோக ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை ஆரோக்யத்தை சீராக வைத்திருக்க உதவும். எனினும் பித்தரோகம், பார்வைக் கோளாறு ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

தொழில் : பத்தாம் பாவக குருவின் மூலமாக உத்யோகத்தில் முன்னேற்றம் தரும் மாற்றத்தினைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினைக் காண்பர். சுயதொழில் செய்வோருக்கு அதிக அலைச்சல் உண்டானாலும் அதற்குரிய தனலாபம் என்பது நிச்சயம் கிடைக்கும். விவசாயம், சமையல், உணவுப்பொருள் வியாபாரம் செய்வோருக்கு முன்னேற்றம் தரும் காலமாக அமையும்.

பரிகாரம் : செவ்வாய் தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வாருங்கள்.

பரணி : பத்தில் குரு பதவி உயரும் 70/100

பொது : பத்தில் குரு பதவியை பரிசளிப்பார் என்பதற்கு உதாரணமாகத் திகழ்வீர்கள். செவ்வாயை ராசிநாதனாகவும், சுக்ரனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பொருளாதார ரீதியாக பல நன்மைகளைச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் அதற்காக அதிக அலைச்சலைக் காண வேண்டியிருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் வாழ்வியல் நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.

நிதி : ஜனவரி ஆறாம் தேதிக்குள்ளாகவே நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சேமிப்பில் ஈடுபடுவீர்கள். ஆடம்பரப் பொருட்களில் அதிக செலவு செய்யாமல் அசையாச் சொத்து சேர்ப்பதில் கவனம் செல்லும். நீண்ட நாள் கனவாக இருந்து வரும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க இந்த ஒரு வருட காலம் துணைபுரிகிறது.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினையும் கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் குறையும். பிரச்னைகளின் போது அதிகம் பேசாமல் அழகான புன்னகையின் மூலம் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை.

கல்வி : ஜனவரி ஆறாம் தேதி முதல் மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கண்டு வருவார்கள். நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தங்கள் பொது அறிவுத்திறனை உயர்த்திக் கொள்ள இயலும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் முன்னிலை பெறுவீர்கள்.

பெண்கள் : குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். குடும்ப உறுப்பினர்களில் யார் தவறு செய்தாலும் பழியினை நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும். கணவரோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றினாலும் புன்சிரிப்பின் மூலம் எளிதாக கடந்து செல்வீர்கள். மனதில் உள்ள குறைகளை அவ்வப்போது உங்கள் நலம்விரும்பிகளிடம் பகிர்ந்துகொள்வது நல்லது.

உடல்நிலை : உடல் ஆரோக்யத்தைப் பேணிக்காக்க உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரைவியாதி, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாவார்கள். பார்வையில் குறைபாடு, உடம்பின் மேற்தோலில் உண்டாகும மாறுபாடு ஆகியவற்றில் சிறப்பு கவனம் கொள்ளுங்கள்.

தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களின் பேச்சுத்திறமை மூலம் முக்கியத்துவம் பெறுவார்கள். சுயதொழில் செய்வோருக்கு முகராசி கைகொடுக்கும். ஸ்வீட் ஸ்டால், ஜவுளி, பித்தளை பாத்திர வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். நகைக்கடை, ஆபரணத்தொழில் செய்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

கார்த்திகை 1ம் பாதம் : அலைச்சலுடன் ஆதாயம் சேரும் 65/100

பொது : முன்கோபத்தினைக் கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் காண இயலும் என்பதை அனுபவ பூர்வமாக உணர உள்ளீர்கள். குருவின் பார்வை பலத்தினை அடுத்து வரும் காலத்தில் இழந்திருப்பதால் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும், செவ்வாயை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அதிக அலைச்சலைத் தந்தாலும் முடிவில் வெற்றி நிச்சயம் என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காமல் பொறுமையாக ஆலோசித்து முடிவெடுங்கள்.

நிதி : பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி புதிய சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் சேமிப்பு என்பது சாத்தியமே. தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். ஷேர்மார்க்கெட், மியூச்சுவல் பண்ட் சேமிப்புகள் நன்மை தரும்.

குடும்பம் : குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டிருந்தாலும் முன்கோபத்தின் காரணமாக அவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்வதன் மூலம் நீண்டநாள் சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண இயலும். உறவினர்களின் வழியில் அதிக செலவுகளைக் காண்பதோடு புதிய பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

கல்வி : மாணவர்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மார்ச் மூன்றாம் தேதி முதல் தொழில்முறைக் கல்வி பயிலும் மாணவர்கள் அபாரமாக செயல்படுவார்கள். அறிவியல் துறை மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் நற்பெயர் அடைவர். மனப்பாடம் செய்வதை விட பாடங்களைப் புரிந்து படிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். செய்முறைத் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும்.

பெண்கள் : நாவடக்கம் என்பது அவசியம் தேவை. நல்லது என்று நினைத்துப் பேசப்போக அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு உங்களுக்கு எதிராகத் திரும்பக் கூடும். பிரச்னைகளின் போது கோபத்தினை வெளிப்படுத்தாமல் அமைதியாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவது நல்லது. பணவிவகாரங்களை தனித்துக் கையாளுவது நல்லதல்ல.

உடல்நிலை : உஷ்ணத்தின் காரணமாக சருமவியாதிக்கு ஆளாக நேரிடும். உடம்பின் மேற்தோலில் உண்டாகும மாறுபாட்டினை உடனுக்குடன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. மே 24ம் தேதி முதல் ஜூலை இறுதி வரை உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.

தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடலாம். எனினும் உங்களது நற்பெயரின் மூலம் பதவி உயர்விற்கான வாய்ப்பினை தக்கவைத்துக் கொள்வீர்கள். சுயதொழில் செய்வோர் தடாலடியான பேச்சின் மூலம் சாதித்து வருவர். என்றாலும் வாடிக்கையாளர்களின் முகம் கோணாமல் நடப்பது அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். விவசாயம் செய்வோர் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க பக்கத்து நிலத்துக்காரர்களை அனுசரித்து நடக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம் : ஞாயிறு தோறும் முருகப்பெருமான் வழிபடுங்கள்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES