Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 August 2021

ஓய்வூதியம்×புதிய ஓய்வூதியம்

ஓய்வூதியம் என்பது பெற்ற ஊதியத்தில் பாதியை அல்லதுபணியாற்றிய ஆண்டுகளின் விகிதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவது ஆகும். இதில் ஓய்வூதியம் எவ்வளவு பெறுவர் என்பதனை கணக்கிட முடியும்....

புதிய ஓய்வூதியம் என்பது ஓய்வூதியம் அல்ல அது ஓய்வூதியம் பெறுவதற்கு அடிப்படையாக அமையும் ஓர் முதலீட்டு திட்டம்.. இதில் எவ்வளவு ஓய்வூதியம் வரும் என்றோ அல்லது மாத ஓய்வூதியமாக பத்தாயிரம் பெற எவ்வளவு முதலீடு ஆண்டுதோறும் செய்ய வேண்டுமென்பதற்கான வரையறை ஏதுமில்லை..ஆகவே புதிய ஓய்வூதிய என்பது ஓய்வூதியம் ஏதும் உத்திரவாதம் இல்லாத ஓர் முதலீட்டு திட்டம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்..

புதிய ஓய்வூதியத்தை இரத்து செய்து

பழைய ஓய்வூதியம் பெற இயலுமா ஆம் அது சாத்தியமானதே

எப்போது அது சாத்தியமாகும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அனைவரை மட்டுமல்ல நாளை இத்திட்டத்தில் இணையவுள்ள புதிய அரசு ஊழியர் வரை இது நாசகரமான திட்டம் இதில் ஓய்வூதியம் என்பது ஏதுமில்லை..இது ஓர் முதலீட்டு திட்டம் மட்டுமே..இது ஏமாற்று வேலை என்ற புரிதலை ஏற்படுத்தும் போது அது நிச்சயம் சாத்தியமே...

போராட்டம் செய்தால் தீர்வு கண்டுவிட முடியுமா...

ஆம் ஆனால் அந்தப் போராட்டம் இந்த திட்டத்தில் இணைந்துள்ள ஊழியர்கள் பெரும்பகுதியை இணைக்கத்தக்கதான விழிப்புணர்வு பிரச்சாரத்துடனானதாய் அமையும்பட்சத்தில் இது சாத்தியமே.

அதற்கான வரலாறுகள் உள்ளனவா...

ஆம் வரலாறு நெடுகிலும் அதற்கான உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.. 1)மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி தமிழகத்தில் கோரிக்கை முன்னிருத்தி போராட்டத்தில் தலைமைபாத்திரம் வகித்த ஜெகதீச அய்யர் பணிநீக்கம் செய்யப்பட்டார்... ஆனால்1988 ல் ஆசிரியர் அரசு ஊழியர் இணைந்த ஒன்றுபட்ட போராட்டம் மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தந்தது..

2) 2002 செப்டம்பரில் மிகப்பெரிய போராட்டம் எந்த விதமான கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஆனால் ஜூலை 2003 போராட்டம் மீண்டும் பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்பப்பெற்றுத்தந்தது.. அதோடு மட்டுமல்லாமல் பணி நியமன தடை ஆணையை திரும்பப்பெறச்செய்தது...

3)2016 பிப்ரவரி போராட்டம் ஓய்வூதியம் குறித்து குழு அமைத்திட மட்டுமல்ல கருணை அடிப்படை பணி நியமனம் ஊழியர்களின் பணி நியமன நிரந்தரமாக்குவதற்கான ஆணை பெற்றுத்தந்தது..

4) 2017 ஜாக்டோ ஜியோ போராட்டம் நீதிமன்ற நெருக்கடிகளைத்தாண்டி ஊதிய மாற்றத்தை பெற்றுத்தந்தது...

தோழர்களே வரலாறு என்ன சொல்கிறது..இந்தியாவில் மூன்றாம் நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த அரசு ஊழியருக்கு அவர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படல் வேண்டும் எனவும் சுக்கிராச்சாரியார் எழுதிய "சுக்கிரநிதி" யில் சொல்லப்பட்டுள்ளது.. மேலும் அதில் சொல்லப்பட்டுள்ள 2575 சுலோகங்களில் அரசன் என்பவன் தனது ஊழியர்களுக்கு போதுமான சமூக பொருளாதார பாதுகாப்பினை உத்திரவாதப்படுதக்கூடிய ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும்.. அவ்வாறு வழங்கிட தவறும் பட்சத்தில் பிரச்சினைகள் அதிகமாகி ஊழியர்கள் மனரீதியான பாதிப்பு ஏற்பட்டு மன்னனை அழிப்பார்கள் என்கிறார்..." Sukracarya highlights the psychological aspect of disputes by pointing out that the servant should desert such a king (master) who does not remember the good done for him,is not satisfied with good service and is suspicious"(sukraniti 2435)...

ஆகவே தோழர்களே! இளைஞர்களே!!

சாத்தியமே! சாத்தியமே !! பழைய ஓய்வூதியம் சாத்தியமே!!!


நாம் ஏற்கனவே அறிந்தது போன்று உலக அளவில் இந்தியாவில் தான் முதன் முதலில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும், ஏன் வழங்கப்படல் வேண்டும் என்ற பதிவுகள் சுக்கிராச்சாரியார் எழுதிய சுக்கிராநிதியில் சொல்லி உள்ளதென வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்... அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டில் நவீன ஓய்வூதிய திட்டம் வடிவமைக்கப்பட்டது என்று தகவல் தெரிவிக்கிறது.இங்கிலாந்து நாட்டில் கஸ்டம்ஸ் துறையில் வயது முதிர்வில் ஓய்வு பெறுபவர்களுக்கான ஓய்வூதிய நிதி 1712 ல் உருவாக்கப்பட்டது. 1810ல் இங்கிலாந்து சிவில் சர்வீஸ் திட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இது பென்சன் திட்டங்களுக்கு அடிப்படை ஆதாரமாக திதழ்ந்தது என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன..முதன்முதலாக மாநில அரசு பென்சன் வழங்கும் திட்டம் 1880 ல் ஓட்டோமான் பிஸ்மார்க் என்பவரால் துவங்கப்பட்டது..

உலகின் முதல் பென்சன்தாரர் பெயர் *மார்டின் ஹார்சம் என்ற இங்கிலாந்து துறைமுகப் பணியாளர் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன...( ஆதாரம் source: *Ayanendu sanyal and Charan Singh "universal pension scheme in India" working paper no 420 Indian institute of management Bangalore, August 2012)

ஓய்வூதியம் வரலாறு

உலகில் எங்கு எப்போது ஓய்வூதியம் வழங்கப்பட்டது என்பது அறிந்தோம்.

இந்தியாவில் எப்போது ஓய்வூதியம் வழங்கப்பட்டது என்பது குறித்து பார்க்கும்போது, சுக்கிராச்சாரியார் எவ்வளவு ஓய்வூதியம் வழங்கல் வேண்டும் என்று குறிப்பிட்டாரே தவிர, யார் வழங்கினார் என்பதற்கான தரவுகள் ஏதுமில்லை.

முதன் முதலில் ஆங்கில காலனிய ஆட்சியின் போது குடிமைப் பணிகளில் ( சிவில் சர்வீஸ்பணிகளில்) ஈடுபட்டவர்களுக்கு 1871 ம் ஆண்டு ராயல் கமிஷனின் குடிமைப் பணி நிர்வாகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டதென்பது தெரிய வருகிறது...(The pension Act 1871,8 th August 1871.)

ஓய்வூதியம் சட்டம் 1871

இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இதன் சிறப்பம்சம் நீதிமன்றங்கள் பென்சன் குறித்த பரிகாரங்கள் தீர்வுகள் காணலாம் , ஆனால் எந்த காரணம் கொண்டும் எந்த நீதிமன்றமும் ஓய்வூதியத்தை முடக்கவோ, கடனுக்காக ஈடாக நிறுத்தவோமுடியாது..

அப்படியானால் இதன் முக்கிய அம்சம் யாதெனில் ஓய்வூதியம் பெறும் குடும்ப பாதுகாப்பு அரணாக இத்திட்டம் கருதப்பட்டது..

அதனால் தான் பெற்ற கடனுக்கு அல்லது வேறு ஏதாகிலும் உத்திரவாத ங்களுக்காகவோ இதனை அட்டாச் செய்ய நீதிமன்றங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது....

இத்தகைய சக்திவாய்ந்த ஓய்வூதிய திட்டம் தான் இன்று எந்த விதமான உத்திரவாதமில்லாத முதலீட்டு திட்டமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது...

மேலும் இத்திட்டத்தில் (pension Act 1871) கமுட்டேசன் செய்யவும் வாரிசுதாரர் நியமனம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டது..

மேலும் இந்திய பென்சன் ஆக்ட் 1919 மற்றும் 1935 ஆகியவை மேலும் பல வசதிகளை ஏற்படுத்தித்தந்தன....

சமூக பாதுகாப்பு கவசமாக விளங்கும் ஓய்வூதியத்தை ஊழியர்களுக்கு வழங்கும் தனது கடமையிலிருந்து வழுவி அதனை தனியார் வசம் ஒப்படைக்கும் பணியை பாரதிய ஜனதா அரசாங்கம் துவக்கியது.. ஜனவரி 2004 முதல் அமுல்படுத்தியது. இதனை எதிர்த்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் அது அங்கம் வகிக்கும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் பல்வேறு அகில இந்திய இயக்கங்களை நடத்தி அதனை பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறமுடியாத நிலையை உருவாக்கியது‌..

இத்தகைய சூழலில் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே 2004 முதல் ஊழியர்களை அத்தகைய திட்டத்தில் அடாவாடியாக இணைத்து பத்து சதவீதம் பிடித்தம் செய்யத்துவங்கியது...

செப்டம்பர் 2013 ல் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரசு மற்றும் பாஜக இணைந்து இத்திட்டத்தை பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது..

ஏறத்தாழ பத்து ஆண்டுகள் மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதலின்றி அமுல் படுத்தியது.அன்றைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாஜக கட்சி ஆதரவைக்கோரிப்பெற்றார்.. அதன் பலனை அவர் திகார் சிறையில் அனுபவித்தார்.

முரண்பட்ட நிலைப்பாடுகள்

பாராளுமன்ற ஒப்புதல் பெறும் போது அதனை எதிர்த்து இடதுசாரிகள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.. அவர்களுடன் இணைந்து இத்திட்டத்தை அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்கத்தது. திமுக ஆதரவு தந்து வாக்களித்தது.

ஆனால் அதே அதிமுக தமிழகத்தில் இத்திட்டத்தை இரத்து செய்ய இது வரை திடமான ஒரு முடிவை எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது...

நீதிமன்ற ஆணை.

ஓய்வூதியம் கருணை தொகையல்ல

அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் அரசின் கருணையால் வழங்கப்படுவதல்ல , அது அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் ஒரு சமூக பொருளாதார அந்தஸ்துடன் வாழ வழங்கப்பட வேண்டிய ஒன்று என்று தலைமை நீதிபதி ஓய்.வி.சந்திரசுட் தலைமையிலான அமர்வு ஆணை வழங்கியது.

.D.S.Nakara and others vs Union of India 17.12.1982

Y.V.Chandrachud(CJ) Tulzapurkar, V.D.Desai,D.A.Reddy,O.Chinnappa(j),Islam,Baharul(j)* Judgement....

(i) that pension is neither a bounty nor a matter of grace depending upon the sweet will of the employer and that it creates a vested right subject to 1972 rules which are statutory in character because they are enacted in exercise of powers conferred by the proviso to Art. 309 and clause (5) of Art. 148of the Constitution ; (ii) that the pension is not an ex-gratia payment but it is a payment for the past service rendered ; and (iii) it is a social welfare measure rendering socio-economic justice to those who in the hey-day of their life ceaselessly toiled for the employer on an assurance that in their old age they would not be left in lurch.

சுதந்திர இந்தியாவிற்கு முன் ஆங்கில காலனிய ஆட்சியின் போது துவங்கப்பட்ட ஓய்வூதியம் செப்டம்பர் 2013 ல் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது,. ஆனால் அதற்கு முன்னர் இதற்கான புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதற்கு வசதியாக பல ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டன... முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதற்கு சொன்ன காரணம் மிக விசித்திரமான ஒன்று..

 இந்தியாவில் பல்வேறு பொருளாதார சமூக மேம்பாட்டு மற்றும் சுகாதாரம், கல்வியறிவு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்டாண்டு காலமாக உயர்ந்தது வருகிறது.. இதனால் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்த அரசு ஊழியர் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஓய்வூதியம் பெறுகிறார் இது அரசுக்கு தீராத நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது என்றார்...எனவே 1999 ம்ஆண்டு வயது முதிர்ந்தோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது Old Age Social and Income Security. OASIS). இக்குழு அறிக்கையின் அடிப்படையில் தான் பங்களிப்பு ஓய்வூதியம் (Defined benefit pension scheme abolished and new defined contributory scheme introduced) என்ற ( முதலீட்டு திட்டம்) ஏமாற்று திட்டம் கொண்டுவரப்பட்டது... இதற்காக *PFRDA (Pension Fund Regulatory Authority) என்ற அமைப்பு ஆகஸ்ட் 23,2003 ல் உருவாக்கப்பட்டது.

 இவ்வமைப்பின் பிரதான நோக்கம் இந்தியாவில் ஓய்வூதியம் குறித்து விரிவான ஏற்பாடுகள் செய்வதும் ஓய்வூதிய நிதியை மேலாண்மை செய்து பராமரித்தலுமாகும்.பங்களிப்பு ஓய்வூதியம் என்ற தேசிய ஓய்வூதியத் திட்டம் அரசு கெஸ்ட் எண் 296 டிசம்பர் 22,2003 ல் வெளியிடப்பட்டு 1.1.2004 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது .

அப்போது மத்திய சர்க்கார் இத்திட்டத்தை மாநில அரசுகள் விரும்பினால் அமுல்படுத்தலாம் அல்லது ஏற்கனவே உள்ள திட்டத்தை தொடரலாம் என்று சொன்னது....அப்போது அன்றைக்கு ஆட்சியிலிருந்த அதிமுக அரசு எதிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1.4.2003 முதல் முன்தேதியிட்டு அமுல்படுத்தியது... ஆனால் இன்று வரை இந்திய பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏற்கப்பட்ட திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு PFRDA என்று சொல்லக்கூடிய ஓய்வூதிய பேராயத்தில் பிடித்தம் செய்த நிதியைப் செலுத்தி எந்த முதலீட்டு திட்டத்திலும் முதலீடு செய்யவும் இல்லை...

அந்த காலகட்டத்தில் மேற்கு வங்காளம், திரிபுரா, கேரளா நீங்கலாக அனைத்து மாநில அரசுகளும் தங்களை இணைத்துக் கொண்டன... தமிழ்நாடு மட்டும் அத்திட்டத்தை ஏற்கவில்லை ஆனால் அமுல்படுத்தியது . அதே நேரத்தில் நிதி முதலீட்டு விசயங்களில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தானடித்த மூப்பாக இன்று வரை செயல்பட்டு வருகிறது....எனவே எந்த வரையறையையும் பின்பற்றாத இத்திட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கு விரிவான பிரச்சாரமும் ஒருங்கிணைந்த போராட்டமும் அவசியமான ஒன்றாகும்...

விசித்திரமான வாக்குவாதம்

இத்திட்டத்தை எதிர்த்து அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தியது . மக்கள் மத்தியில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றன போது பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் வழுவான எதிர்ப்பினை பதிவு செய்தனர்.. இதனால் இத்திட்டம் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது..

ஆர்எம்எஸ்ன் துணிச்சல்

அவ்வாறான ஒரு கமிட்டி திரு.ஜெய்ராம் ரமேஷ்( காங்கிரஸ் எம்பி) அமைக்கப்பட்டது.. அக்குழுவில் AISGEF. சார்பில் தோழர்RMS தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து இத்திட்டம் அபாயகரமானது என வாதிட்ட போது, குழுவின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் கூறியதாவது நீங்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையினர் (Thin minority) மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் உங்களுக்காக அரசு அதிக நிதிச் சுமையை தாங்கி இரண்டு சதவீத மக்களாகிய உங்களுக்கு நாங்கள் கவலைப்பட முடியாது என்றார்...அப்போது ஆர்.முத்துசுந்தரம் நாடு முழுவதும் வெறும் 8000 பேர் மட்டுமே உள்ள ( MPs and MLA are razor thin minority) நீங்கள் மெல்லிய சிறுபான்மையினர் உங்களுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு எதற்காக வழங்கப்பட்டது என்ற கேள்வியை வைத்தார். அதற்கு குழுத் தலைவரிடமிருந்து மௌனமே பதிலாக கிடைத்தது என்பது நாம் அறிந்திருக்க வேண்டிய உண்மை...

( ஆதாரம் 16 வது தேசிய மாநாட்டு வெளியீடு ஏப்ரல் 5--8 , 2018 சென்னை )

புதிய ஓய்வூதிய திட்டம் ஏன் அமுல்படுத்தப்படுகிறது

அரசு தனது சமூகப்பொறுப்புகளிலிருந்து( Social Responsibility) விலகிக்கொண்டு தனியார் வசம் ஒப்படைக்கும் போது நிதிச்சுமை குறையும் என்ற கருத்தோட்டம் அறிவுஜீவிகள் என்ற ஒரு சில அறைகுறை அறிவாளிகள் மத்தியில் உதித்தது தான்..

ஆனால் உண்மை நிலை என்ன இதுவரை வங்கிகளில் கடன் பெற்று கட்டாத ஏறத்தாழ 4.50 இலட்சம் கோடி ரூபாய் வஜா செய்யப்பட்டுள்ளது..


இதில் ஐம்பது சதவீதம் பெருமுதலாளிகள் செலுத்திட வேண்டிய தொகை...

மேலும் இவர்கள் சொன்ன

இரண்டு காரணங்கள்

1) இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கூடிக்கொண்டே போகிறது.இதனால் இவர்களுக்கான ஓய்வூதிய நிதி செலவு கூடுகிறது..

2) இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்கிறது இதனால் அவர்களை பாதுகாக்க அரசால் முடியாது, எனவே அனைத்து முதியோர் உள்ளடக்கிய தேசிய ஓய்வூதியத் திட்டம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதாகும்...2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மொத்த மக்கட்தொகையில் முதியோர் எண்ணிக்கை 8% இதில் பெண்கள் 8.4% ஆண்கள் 7.7% . இந்த முதியோர் எண்ணிக்கை 2026 ல் 12.4% ஆகவும் 2050ல் 20 %ஆகவும் 2100ல் 37% மாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது (ஆதாரம் எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஜூலை 8,2017,vol l11 no27 page 77--85 "Are our contributory pension schemes failing the poor"?).





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES