Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

15 November 2020

சிம்மம் : குரு பெயர்ச்சி 2020 - 2021

குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை)
குரு பெயர்ச்சி 2020 - 2021





மகம் : குருபார்வையால் சுபநிகழ்ச்சி 60/100

பொது : கடந்த ஒரு வருட காலமாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். என்றாலும் ஆறாம் பாவத்தில் குருவின் அமர்வு நல்ல ஞானத்தைத் தரும். வேகம் நிறைந்த உங்களுக்கு நிதானத்தைக் கற்றுக்கொடுக்கும். மறைவில் இருந்து உங்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். கூட இருந்தே குழி பறித்து வந்தவர்களை விட்டு விலகுவீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். போட்டி, பொறாமை நிறைந்தவர்களை சமாளிப்பதில் பெரும்பான்மையான நேரத்தினை செலவிட வேண்டியிருக்கும். ஆன்மகாரகன் சூரியனை ராசிநாதனாகவும் ஞானகாரகன் கேதுவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டிருக்கும் நீங்கள் தற்போது ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.

நிதி : நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். அதே நேரத்தில் புதிதாக கொடுக்கல்,வாங்கலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக யாரை நம்பியும் ஜாமீன் பொறுப்பு ஏற்கலாகாது. தன ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்பில் குறை உண்டாகாது. தொழில்முறையில் சம்பாதிக்கும் பணம் உபயோகமாய் அமையும். சொத்துச் சேர்க்கையில் ஈடுபடலாம்.

குடும்பம் : குடும்பத்தில் அமைதி நிலவும். குருவின் குடும்ப ஸ்தான பார்வை சுபநிகழ்ச்சிகளை நடத்த துணை புரியும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக தொலைதுாரத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவியாய் அமையும். நெருங்கிய உறவினர் உதவி கேட்டு மறுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதனால் உண்டாகும் குழப்பத்தினை அழகாக சமாளிப்பீர்கள்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலையில் காணும் தேக்கத்தினைப் போக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். செய்முறை வகுப்பினில் ஆர்வம் கொள்ளும் நீங்கள் தியரி பாடங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. கணிதம், அறிவியல் பாடப்பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களிடம் நறபெயர் காண சற்று போராட வேண்டியிருக்கும். தேர்வின்பொழுது சகமாணவர் செய்யும் தவறு உங்களைப் பாதிக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

பெண்கள் : வீண் வம்பு விவகாரங்களால் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். குடும்பப் பிரச்னைகளில் கணவரின் உடன்பிறந்தோர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பெரியவர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டு நற்பெயர் காண வேண்டியது அவசியம். பண விவகாரங்களில் தனித்துச் செயல்படாதீர்கள். மாற்று மொழி பேசும் நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
உடல்நிலை : குருவின் ஆறாம் இடத்து அமர்வு உடல்நிலையை சற்றே அசைத்துப் பார்க்கும். குறிப்பாக கல்லீரல், பித்தப்பை, தைராய்டு, ரத்த அழுத்தம் சார்ந்த ரோகங்கள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. உணவினில் எண்ணெய் பண்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் : ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை உத்யோக ரீதியாக முன்னேற்றத்தைத் தரும். ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கம் தோன்றினாலும் அதற்குரிய கவுரவம் கிடைக்கக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்க முயற்சிப்பர். தொழிலதிபர்கள் அதிகளவில் முதலீடு செய்யும்போது நிதானத்துடன் செயல்படவும். வெளிநாடு சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் வளர்ச்சி பெறும். வெளிநாட்டில் பணிபுரிவோர் சிக்கலான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.

பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

பூரம் : சொந்த வீடு கட்டும் யோகம் 55/100

பொது : கடந்த ஒரு வருடமாக ஆட்சி பலம் பெற்றிருந்த குரு தற்போது நீச பலம் பெற உள்ளதால் உங்களுக்கு பெருத்த பாதிப்பு ஏதும் இராது. தனகாரகன் சுக்ரனை நட்சத்திர அதிபதியாகவும் சூரியனை ராசி அதிபதியாகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு குருவின் ஆறாம் இடத்துப் பெயர்ச்சி என்பது துரோகிகளை அடையாளம் காட்டும். நீங்கள் நல்லவர் என்று நம்பியிருந்த நபர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவது கண்டு மனம் வருந்துவீர்கள். எனினும் மிகுந்த மன வலிமை உடையவர் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு சில நேரத்தில் உண்டாகும் நம்பிக்கையின்மை காரணமாக உடனிருப்போர் மீது கோபம் உண்டாகலாம்.

நிதி : ராகுவுடன் சுக்ரன் சேரும் காலத்தில் நிதி நிலை நன்றாக உயர்வடையக் காண்பீர்கள். தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வையும் விழுவதால் சம்பாதிக்கும் பணம் அசையாச் சொத்தாக உருவெடுக்கும். சொந்த வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் பொருளிழப்பினை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. ஆடம்பர செலவிற்கான வாய்ப்பு உண்டு.

குடும்பம் : குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவர். குடும்பத்தினரின் விருப்பத்தினை நிறைவேற்ற கூடுதலாக செலவழிப்பீர்கள். சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினை குரு உண்டாக்கித் தருவார். பெண் குழந்தைகளை அனுசரணையோடு வளர்க்க வேண்டியது அவசியம். குடும்பப் பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள்.
கல்வி : மாணவர்கள் சற்று போராடி வெற்றி காண வேண்டியிருக்கும். உயர்கல்வியில் எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சார்ந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் தங்கள் திறமையின் மூலம் வளர்ச்சி அடைவார்கள். விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் உடல்தகுதியினை நிரூபிப்பதில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரலாம்.
பெண்கள் : குடும்பப் பொறுப்புகளில் உங்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறும். தனித்துவமான செயல்பாடுகள் உறவினர் மத்தியில் சற்று அவப்பெயரைத் தந்தாலும் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றி வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ரத்தசோகை, உடல் அசதி போன்றவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு.

உடல்நிலை : ரோக ஸ்தானத்தில் வந்து அமர உள்ள குருவினால் உடல்நிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் உண்டாகும். கொலஸ்ட்ரால், தைராய்டு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவை உங்கள் உடல்நிலையை பேணிக்காக்க துணை நிற்கும்.
தொழில் : உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரனின் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதாலும், நீசம் பெற்ற குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்தின் மீது விழுவதாலும் தொழில் முறையில் சிறப்பான தன லாபத்தினைக் கண்டு வருவீர்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் தனித்திறமையின் மூலம் நல்ல வளர்ச்சியினைக் காண்பர். தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். புதிய பங்குதாரர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உண்டு. ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, செல்போன் வியாபாரம் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பர். தொழில் முறையில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பெரிதும் நன்மையைத் தரும்.

பரிகாரம் : வெள்ளி தோறும கோபூஜை செய்து வழிபட்டு வரவும்.

உத்திரம் 1ம் பாதம் : அரசு வகையில் நன்மை 60/100

பொது : குருவின் ஆறாம் பாவக சஞ்சாரம் உங்களுக்கு சற்று சிரமத்தினைத் தரக்கூடும். மனநிலையில் நம்பிக்கையை இழந்தது போல் உணர்வீர்கள். ராசிநாதன் மற்றும் நட்சத்திரநாதன் ஆகிய இரண்டு பொறுப்பினையும் சுமக்கும் சூரியன் பலம் பெறும் நேரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் பணிகளைச் செய்து முடிக்க இரவு நேரத்தினை விட பகல் நேரமே உசிதமாக அமையும். முக்கியமான பணிகளை பகல்பொழுதிற்குள்ளாக செய்து முடிப்பது நன்மை தரும். 06.01.2021 வரை குரு சூரியனின் நட்சத்திரக்காலில் சஞ்சரிப்பதால் அதுவரை உங்கள் செயல்திட்டங்களில் தடையில்லா வெற்றியைக் கண்டு வருவீர்கள்.

நிதி : கவுரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் கூடினாலும் அதற்கேற்ற பொருள் வரவு இருந்து வரும். சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்தல் கூடாது. போட்டி, பந்தயம் கட்டுதல், சூதாட்டம் ஆகியவற்றில் இருந்து விலகியே இருப்பது நல்லது.
குடும்பம் : குடும்ப உறுப்பினர்களோடு உங்களின் பிடிவாத குணத்தினால் வீண் கருத்து வேறுபாடு அவ்வப்போது உருவாகும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் குணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் வழியில் கலகத்தினை சந்திக்க நேரிடும். நெருங்கிய சொந்தம் ஒன்று உதவி கேட்டு மறுக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் பரஸ்பரம் உருவாகலாம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

கல்வி : சகமாணவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சற்றே சிரமம் காண்பர். அறிவியல் பாடங்கள் சரிவர புரியாமல் ஆசிரியர் மேல் பழி சொல்வீர்கள். மனப்பாடத்திறன் குறைவதாக எண்ணுவீர்கள். குருட்டு மனப்பாடம் செய்வதைவிட பாடங்களை புரிந்து படிப்பது நல்லது. குருவின் ஆறாம் இடத்துச் சஞ்சாரம் உங்களை சற்றே சிரமத்திற்கு உள்ளாக்கும் என்பதால் தேர்வு நேரத்தில் சிறப்பு கவனம் தேவை.

பெண்கள் : முன்கோபத்தினைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அவசரப்பட்டு பேசும் கோபம் நிறைந்த வார்த்தைகள் உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக அமையும். உங்கள் செயலை நியாயப்படுத்திப் பேச முற்படுவீர்கள். பிறந்த வீட்டுப் பெருமையை புகுந்த வீட்டில் பேசப்போய் சங்கடத்தினை சந்திக்க நேரிடும். கணவர் வழி உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.

உடல்நிலை : ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக பெண்கள் தங்களின் ஆரோக்யத்தை சரிவர பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். கழுத்துவலி, தோள்வலி, முதுகு வலி, உடல் அசதி ஆகியவற்றால் அவ்வப்போது அவதிப்படுவீர்கள். இதனால் உங்கள் செயல்வேகம் குறைவதாக உணர்வீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

தொழில் : தொழில்முறையில் சிறப்பான பலம் உண்டாவதைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுப்புகள் உயரக் காண்பார்கள். அரசுத்தரப்பில் வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். பெருநிலக்கிழார்கள், நிலச்சுவான்தாரர்கள் ஆகியோர் தங்கள் பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவார்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் முழுமுயற்சியின் மூலம் வெற்றி பெற்றுவருவார்கள். தொழிலதிபர்கள் அரசுத்தரப்பு உதவியின் மூலம் தங்கள் நிறுவனத்தை வலுப்படுத்திக் கொள்வார்கள். குருவின் பார்வைபலமும், ராகுவின் அமர்வும் தொழில் மற்றும் உத்யோகத்தில் உங்களைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது.

பரிகாரம் : தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES