Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

15 November 2020

கடகம் : குரு பெயர்ச்சி 2020 - 2021

குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை)
குரு பெயர்ச்சி 2020 - 2021







புனர்பூசம் 4ம் பாதம் : குரு பார்க்க கோடி நன்மை 75/100

பொது : ராகு,கேதுப் பெயர்ச்சியினால் சாதகமான பலன்களை அனுபவித்து வரும் உங்களுக்கு வரவிருக்கும் குருப்பெயர்ச்சி மேலும் வலிமை சேர்க்கும். குருவின் நேரடி பார்வை உங்கள் செயல்களில் இருந்து வரும் தடுமாற்றத்தைப் போக்கி செயல்வெற்றியை உறுதி செய்யும். நட்சத்திர அதிபதி குருவின் அனுக்ரஹமும் ராசி அதிபதி சந்திரனின் அவ்வப்போதைய சாதகமான சஞ்சார நிலையும் உங்களுக்கு தொடர்வெற்றியைத் தந்து கொண்டிருக்கும். இதுநாள் வரை பொறுமையாய் காத்திருந்ததற்கான பலனை தற்போது அனுபவிக்க உள்ளீர்கள்.
நிதி : ராகுவின் சாதகமான அமர்வு நிலை சிறப்பான தனலாபத்தினைத் தந்துகொண்டிருக்கும். குருவின் பார்வை பலமும் இணைவதால் செலவுகள் குறைந்து சேமிப்பு உயர்வடையும். தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் அரசுத் தரப்பு நிறுவனங்களில் டெபாசிட் செய்வதன் மூலம் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பினை உறுதி செய்துகொள்வீர்கள். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு கிடைக்கும் தனலாபத்தில் ஒரு பகுதியை தான தர்மங்களுக்கு செலவழிக்க முற்படுவீர்கள்.

குடும்பம் : குடும்பத்தில் சலசலப்புகள் தீர்ந்து அமைதி நிலவும் என்பதை குருவின் பார்வைநிலை உறுதி செய்கிறது. பேசும் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்து குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நற்பெயர் காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நேரம் இது. உறவினர்களால் உண்டான மனக்கசப்பு நீங்கும். பெரியவர்களின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கல்வி : மாணவர்கள் ஆசிரியர்களின் துணையுடன் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள். கணிதம், மொழிப்பாடங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சித்துறை மாணவர்கள் தங்கள் கைடுகளின் துணையுடன் ஆய்வுப்படிப்பினை விரைவாக முடித்து பட்டம் பெறுவார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் உங்களுக்கான முக்கியத்துவத்தை உறுதி செய்வீர்கள். வீட்டில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பார்கள். கணவரின் வழியில் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் குறைவின்றி கிடைத்து வரும். முக்கியமான நேரத்தில் உங்கள் பேச்சும் செயலும் வெற்றியைப் பெற்றுத் தருவதால் குடும்பத்தினரிடையே பெரும் மதிப்பினைப் பெறுவீர்கள்.

உடல்நிலை : குருவின் பார்வை பலம் உடல்நிலையை சீராக வைத்திருக்க உதவும். என்றாலும் இடையே உண்டாகும் குருவின் ஐந்து மாத கால அதிசாரம் சற்று சிரமத்தைத் தரக்கூடும். 05.04.2021 முதல் 14.09.2021 வரை உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். குளியலறை, கழிவறை ஆகியவற்றை பயன்படுத்தும்போது நிதானமாக அடியெடுத்து வைப்பது நல்லது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஓரளவிற்கு வலி குறைந்திருக்கக் காண்பார்கள்.

தொழில் : ராகுவின் சாதகமான அமர்வு நிலையோடு குருவின் பார்வை பலமும் இணைவதால் தொழில்முறையில் சிறப்பான நேரத்தினைக் காண்பீர்கள். அந்நிய தேசம் சார்ந்த பணிகள் வெற்றி தரும். அயல்நாடு செல்லக் காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். சுயதொழில் செய்பவர்கள் வெற்றி கண்டு வருவார்கள். சிறிய அளவிலான முதலீட்டுடன் கூடிய தொழில்கள் பெருத்த லாபத்தினைப் பெற்றுத் தரும். உண்மையான உழைப்பும் செய்தொழிலில் நேர்மையும் உங்களைத் தனித்துக் காட்டும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பதோடு பதவி உயர்வினையும் பெறுவார்கள்.

பரிகாரம் : மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்து வாருங்கள்.

பூசம் : நிதிநிலை மனநிறைவு தரும் 70/100

பொது : குருவின் நேரடிப் பார்வையின் மூலம் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாகக் காத்திருந்த வாய்ப்பு ஒன்று கையில் கிடைக்கக் காண்பீர்கள். காலநேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு தயங்காமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ராசியின் அதிபதி சந்திரன் சாதகமாக சஞ்சரித்தாலும் நட்சத்திர அதிபதி சனியால் அவ்வப்போது மனதின் மூலையில் வீணான சந்தேகத்திற்கு இடமளித்து வருகிறீர்கள். தேவையற்ற சந்தேகத்தால் உங்கள் செயல்வேகம் தளர்வதோடு வெற்றிக்கான காலமும் தாமதப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். குருவின் துணை இருப்பதால் நாம் சரியான பாதையில்தான் பயணித்து வருகிறோம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம்.
நிதி : கிரஹங்களின் சஞ்சாரப்படி தற்போது நிதி நிலை நன்றாகவே உள்ளது. கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினை சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலனைப் பெற்றுத் தரும். நிலுவையில் உள்ள பாக்கித்தொகைள் வசூலாகும். நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு சேமிப்பினை உயர்த்திக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்து வாங்க முற்படுவீர்கள்.

குடும்பம் : குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பனிப்போர் உங்கள் தனிப்பட்ட முயற்சியால் முடிவிற்கு வரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்து வரும் கருத்து வேறுபாட்டினை போக்கும் முயற்சியில் கவுரவம் பாராமல் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தேடித் தரும் வகையில் அமையும். உறவினர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனநிம்மதி காண்பீர்கள். உடன்பிறந்தோ£ர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் காண்பீர்கள்.

கல்வி : மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். மனப்பாடத் திறன் கூடும். எழுத்துப்பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு கால நேரம் சாதகமாக அமையும். போட்டியாக நீங்கள் நினைக்கும் மாணவர்களும் உங்களுடன் நட்புறவு கொண்டு ஆதரவாக செயல்படுவார்கள்.

பெண்கள் : நேரம் நன்றாக இருந்தாலும் பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. நீங்கள் கறாராக பேசும் வார்த்தைகள் உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பினை உண்டாக்கக் கூடும். இதனால் வீண்வம்பு விவகாரங்கள் உருவாகக் கூடும். பிரச்னைக்கு உரிய நேரத்தில் அதிகம் பேசாமல் அமைதி காத்து வாருங்கள். நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிரிகள் குறைந்த கால அளவிற்குள் காணாமல் போய்விடுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகள் மிகப்பெரிய தாக்கத்தினை உருவாக்கும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது.
உடல்நிலை : குருவின் பார்வையுடன் ஆரோக்யத்தை சரிவர பராமரிப்பீர்கள். என்றாலும் கால்சியம் குறைபாடு, எலும்பு மஜ்ஜைகளில் தேய்மானம் போன்ற பிரச்னைகளால் சற்று அவதிப்படுவீர்கள். மனதில் இருக்கும் வலிமை உடலில் இல்லாதது போல் உணர்வீர்கள். இரவினில் பசும்பால் தினமும் அருந்தி வருவதன் மூலம் உடல்நலத்தை பேணிக்காக்க இயலும்.
தொழில் : நீதி, நேர்மை, நாணயம் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு அலுவலகத்தில் நற்பெயர் காண்பீர்கள். அதே நேரத்தில் பொறுப்புகள் கூடுவதால் பணிச்சுமையும் அதிகரிக்கக் காண்பீர்கள். பெயர், புகழுக்காக பணியாற்றுபவர்கள் நீங்கள் என்பதைப் புரிந்துகொண்டு மேலதிகாரிகள் தங்கள் பணிகளையும் உங்கள் மீது சுமத்துவார்கள். என்றாலும் எல்லாப் பொறுப்புகளையும் அழகாக குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து பதவி உயர்வினைக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோருக்கு கால நேரம் சாதகமாக உள்ளது. விவசாயம், உணவு சார்ந்த தொழில்கள், தையல்துறை, ஜவுளித்துறை சார்ந்த தொழில்களைச் செய்பவர்கள் நல்லதொரு தனலாபத்தினைக் காண்பார்கள்.

பரிகாரம் : மனநிம்மதி வேண்டி தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வருவது நல்லது.

ஆயில்யம்: வாகன வாங்கும் யோகம் 75/100

பொது : இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களது தனித்திறமை வெளிப்பட்டு பெயரும் புகழும் அடைவீர்கள். ராசிநாதன் சந்திரனின் துணையால் அன்புடனும், நட்சத்திர அதிபதி புதனின் துணையால் புத்தி கூர்மையுடனும் செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். ஐந்தாம் இடத்து கேது அவ்வப்போது சிறிது மனக்குழப்பத்தை தந்தாலும் அதிலிருந்து விடுபட குருவின் பார்வை துணையிருக்கும். ஆத்ம ஞானம் என்பது கூடும். சிந்தனையில் இருந்து வரும் கேள்விகளுக்கு உரிய விடை கிடைக்கக் காண்பீர்கள். செயல்களில் இருந்து வந்த தடுமாற்றம் என்பது காணாமல் போய் ஆணித்தரமாக செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள்.
நிதி : ராகுவின் துணையால் உங்கள் நிதி நிலை நன்றாக உயர்வடையும். குருவின் பார்வை பலமும் இணைவதால் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வந்து சேமிப்பு உயரும். புதிய சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. வண்டி வாகனங்களை புதிதாக வாங்க நினைப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வங்கி சார்ந்த கடனுதவி தடையின்றி கிடைக்கும். அதே நேரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. உள்நாட்டு முதலீடு என்பது வெற்றியைப் பெற்றுத் தரும்.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றி வைக்கும் நீங்கள் அவர்களிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்க இயலாது. பெற்றோர்களிடம் கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பித்ரு கர்மா, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை தடையின்றி செய்திட கால நேரம் சாதகமாக அமையும். தம்பதியராக இணைந்து செயல்பட்டு சுபநிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவீர்கள். உடன்பிறந்தோர் பக்கபலமாகத் துணையிருப்பார்கள்.

கல்வி : வித்யாகாரகன் புதனின் சாரத்தினைப் பெற்றிருக்கும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சியின் காலத்தில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பான உயர்வினைக் காணும். வேதியியல், வானவியல் சார்ந்த ஆராய்சி படிப்பில் இருக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சியில் சிறப்பான வெற்றியைக் காண்பதோடு அரசுத் தரப்பிலிருந்து விருதினையும் பெறுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி காண்பதோடு விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள்.
பெண்கள் : பொறுப்புகளைச் சுமக்கும் நீங்கள் பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். கூடுதல் பணிச்சுமையின் காரணமாக நீங்கள் பேசும் வார்த்தைகள் வீட்டில் உள்ளோரின் மனதினைப் புண்படுத்தக் கூடும். பிள்ளைகள் செய்யும் தவறுகளை தனிமையில் சுட்டிக்காட்டுங்கள். கணவரின் வெற்றியில் முக்கியப் பங்காற்றுவதோடு சரிபாதி உரிமையையும் பெற்று உங்கள் தனித்துவத்தை நிலைநாட்டுவீர்கள்.

உடல்நிலை : தலைவலி, பித்தம் போன்ற பிரச்னைகளால் ஆரோக்யத்தில் சிறு தொந்தரவுகளைச் சந்தித்து வருவீர்கள். டென்ஷனைக் குறைத்துக் கொண்டாலே போதும், உடல் ஆரோக்யத்துடன் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையற்ற சிந்தனைகளும் அநாவசியமான கற்பனைகளும்தான் உங்களுக்கு எதிரிகள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். கவனக் குறைவின் காரணமாக சிறு பிரச்னைகளை சந்திக்க நேரும் என்பதால் வண்டி வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் : உத்யோகஸ்தர்கள் தங்களின் சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் அலுவலகத்தில் சுகமான சூழலைக் காண்பார்கள். கீழ்நிலைப் பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் என இரு தரப்பினரையும் அனுசரித்துச் செல்வதால் பதவி உயர்வினைக் காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரித்தாலும் அவற்றை தானே தனியாக சுமக்காமல் மற்றவர்களிம் பிரித்துக் கொடுத்து வேலை வாங்கும் கலையை கற்றுக் கொள்வீர்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பர். மளிகை, பலசரக்கு, மொத்த வியாபாரம், தானியங்கள் கொள்முதல் செய்வோர் வியாபாரம் சிறக்கக் காண்பார்கள். நகைக்கடை, ஜவுளிக்கடை வைத்திருப்போர் தங்கள் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் : வெங்கடேசப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES