Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 November 2021

மிதுனம் :குரு பெயர்ச்சி பலன்கள் 13.11.2021 முதல்

 குரு பெயர்ச்சி பலன்கள் 13.11.2021 முதல் 14.04.2022 வரை

மிதுனம் : அன்பினால் அகிலம் ஆள்வீர்கள்



மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : ஒற்றுமை வலிமையாம்

அஷ்டமத்துச் சனியின் கஷ்டத்தைத் தாங்கி வரும் உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சற்று நிம்மதியைத் தரும். 8ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இது வரை சஞ்சரித்து வந்த குரு இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு 9ம் இடமாகிய பாக்ய ஸ்தானத்திற்கு இடம் பெயர உள்ளார். மனதினில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். தர்ம, நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை ஒதுக்கிவிட்டு சரியான பாதையில் பயணிப்பீர்கள். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் புதனை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் வேகத்துடன் விவேகத்தையும் கையாண்டு வெற்றி காண்பீர்கள். நட்பு வட்டத்தின் மூலமாகவும் நீங்கள் தனிப்பட்ட முறையில் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரின் மூலமாகவும் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். கடந்த ஒரு வருட காலமாக தடைபட்டு வந்த முக்கியமான பணி ஒன்றினை அடுத்து வரவுள்ள ஐந்து மாத காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள்.

நிதி

அநாவசிய செலவுகள் குறையும். அதே நேரத்தில் தான தர்மத்திற்காக செய்யும் செலவுகள் கூடும். எதிர்கால நலன் கருதி பிள்ளைகளின் பெயரில் புதிய சேமிப்பில் இறங்குவதற்கான வாய்ப்பு கூடி வரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்புண்டு. குடியிருக்கும் வீட்டினில் மாற்றம் செய்ய முற்படுவோருக்கும், புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கும் நேரம் கூடி வரும். கடன் தொல்லை குறைந்து நிதி நிலை ஏறுமுகமாகவே அமையும்.

குடும்பம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கி அவர்களோடு இணைந்து செயல்படுவீர்கள். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்கள் மற்றவர்களின் பாராட்டினைப் பெறும். வாழ்க்கைத்துணையின் மனநிலையில் கவனம் தேவை. சம்பாதித்த சொத்தினை பிள்ளைகளின் பெயருக்கு உயில் எழுத காத்திருப்போருக்கு நேரம் கூடி வருகிறது. பாகப்பிரிவினைகள் பிரச்னை ஏதுமின்றி முடிவிற்கு வரும்.

கல்வி

ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்கள் தனித்திறமையை கூட்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடத்தும் பயிற்சித் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புள்ளிவிபரத்துடன் விடையளிக்கும் திறனை உயர்த்திக் கொள்வீர்கள். கணிதம், மொழிப்பாடங்களில் சிறந்து விளங்கும் நீங்கள் அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்கள்

பாராட்டி பேசுபவர்களை நல்லவர்கள் என நம்பிவிடுவது உங்களின் மிகப் பெரிய பலவீனம். கடந்த சில நாட்களாக தடைபட்டு வந்த சேமிப்பு மீண்டும் உயரத் துவங்கும். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்வுகளைக் காண்பீர்கள். குடும்பப் பணிகளில் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருக்கும். கணவரோடு வீண் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் ஆதரவோடு நினைத்ததை சாதித்து வருவீர்கள்.

உடல்நிலை

ரோக ஸ்தானத்தில் கேதுவின் அமர்வு பல்வேறு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் நிலையில் குருவின் பார்வை உங்கள் ஆரோக்யத்தைக் கட்டிக் காக்கும். தலைவலி. நரம்பு தளர்ச்சி, முதுகுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி ஆகிய தொந்தரவுகளால் அவ்வப்போது அவதிப்பட நேரிடலாம். குருவின் பார்வை விழுவதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நோய் எதிர்ப்புத் திறன் கூடுவதால் நோய்த்தொற்று சார்ந்த பயம் ஏதும் கிடையாது.

தொழில் :

 ஜீவன ஸ்தான அதிபதி குரு ஒன்பதில் அமர்வதால் தொழில்முறையில் அதிக அலைச்சலின் மூலம் முன்னேற்றம் காண உள்ளீர்கள். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு தொழில் மாற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். சிலர் தங்களின் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் ஈடுபட நேரிடும். காவல்துறை, சட்டத்துறை, கல்வித்துறை, ரெவின்யூ துறை சார்ந்த பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி தங்கள் திறமையை நிரூபிப்பதோடு பாராட்டும் பெறுவார்கள். அந்நிய தேசம் செல்ல காத்திருப்போருக்கு கால நேரம் கூடி வரும்.

பரிகாரம்

வியாழன் தோறும் கருடாழ்வாரை வழிபட்டு வாருங்கள்.


திருவாதிரை நட்சத்திரம்  : 
குன்றென நிமிர்ந்து நில்

அஷ்டமத்துச் சனியால் சங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நினைத்ததை சாதிக்கும் திறனை அளிக்கிறது. நட்சத்திர அதிபதி ராகு 12ல் நீசம் பெற்றாலும் ராசிநாதன் புதனின் புத்திகூர்மையைக் கொண்டிருக்கும் நீங்கள் நேரத்திற்குத் தகுந்தாற்போல் உங்களை மாற்றிக்கொண்டு செயல்படுவீர்கள். கும்ப குருவின் சஞ்சார காலத்தில் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். கடன்பிரச்னைகள் குறையும். கடந்த சில வருடங்களாகக் கண்டு வரும் தடைகள் விலகும். தனிப்பட்ட முறையில் கவுரவம் உயர்வதோடு சுற்றியுள்ளோரையும் உங்களைச் சார்ந்திருக்கச் செய்வீர்கள். குருபகவானின் சாதகமான சஞ்சாரத்தினால் உங்களின் நல்லெண்ணங்களும், நற்சிந்தனைகளும் வெளியுலகத்திற்குத் தெரிய வரும். உண்மையாக உழைத்து வந்ததற்கான ஊதியமாக பாராட்டுகள், விருதுகள் வந்து சேரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள்.

நிதி

கடன் பிரச்னைகளில் இருந்து ஓரளவிற்கு விடுபடுவீர்கள். செலவுகள் கூடினாலும் அவற்றை சமாளிக்கின்ற வகையில் வரவு நிலையும் தொடரும். பிள்ளைகளின் பெயரில் புதிய சேமிப்பினைத் துவங்குவீர்கள். தங்கம், வெள்ளிப் பொருட்கள் சேரும். வங்கியில் அடகு வைத்திருந்த நகைகள் வீட்டிற்குள் வரும் நேரமிது. அடுத்தவர்களுக்கு உதவுவதற்காக கடனாக கொடுத்த தொகை திரும்ப வராமல் போகலாம்.

குடும்பம்

குடும்பத்தினர் உங்கள் எண்ணத்தை புரிந்து செயல்படுவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில் திருப்பு முனை உண்டாகும். அவர்களின் முன்னேற்றத்தில் உங்களின் பங்கு பிரதானமாக இருக்கும். உடன்பிறந்தோரின் குடும்பத்தில் உண்டாகும் சலசலப்புகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் வாழ்க்கைத்துணை முக்கியப் பங்காற்றுவார். அவரது உடல்நிலையிலும் மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கல்வி

குருவின் பார்வை விழுவதால் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கற்பனைத்திறன் வெகுவாகக் கைகொடுக்கும். ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வம் இல்லாமல் போகும். ஆனாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்தி படித்தாலே நல்ல மதிப்பெண்களைப் பெற குரு துணையிருப்பார்.

பெண்கள்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களைத் தருகிறது. ஆரோக்கியம் மேம்படும். மெனோபாஸ் காலத்தில் உள்ள பெண்கள் மனத்தெளிவினைப் பெறுவார்கள். கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் குருவின் அருளால் தீரும். அடுத்து வரவுள்ள ஐந்து மாத காலமும் சந்தோஷமாகக் கழியும். கணவர் உங்கள் திட்டங்களுக்கு துணையிருப்பார். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். பிள்ளைகளின் வாழ்வினில் நன்மை நடக்கக் காண்பீர்கள்.

உடல்நிலை

குருவின் பார்வையால் ஆரோக்யம் மேம்படும். ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும். ஆறாம் இடத்து கேது அவ்வப்போது உடல் அசதியைத் தோற்றுவிப்பார். உடல் அசதியை வெற்றி கொள்ள மிதமான உடற்பயிற்சி அவசியம். தோல் வியாதியால் அவதிப்பட்டு வருபவர்கள் அதிலிருந்து மீள்வார்கள்.

தொழில்

பொறமைக்காரர்களால் சிரமத்தை சந்தித்து வரும் உங்களுக்கு குருவின் துணை பக்கபலமாய் அமையும். அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை செய்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் நேர்மையான அணுகுமுறையால் நற்பெயரும் நல்ல லாபமும் காண்பர். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். அந்நிய தேசத்தில் பணி கிடைக்காமல் அவதிப்படுவோர் தற்காலிகமாக ஏதேனும் ஒரு பணியில் சேர வாய்ப்பு வந்து சேரும். பலசரக்கு, ஸ்டேஷனரீஸ், நாட்டுமருந்து வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். சிறு குறு வியாபாரிகள் நல்ல லாபம் காண்பர். மொத்தத்தில் கும்ப குருவின் சஞ்சாரம் உங்களுக்கு உயர்வினைத் தரும்.
பரிகாரம் : செவ்வாய் தோறும் வாராஹி அம்மனை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்: 
யாவரையும் மதித்து வாழ்

நட்சத்திர அதிபதி ஆகிய குரு பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதில் வந்து அமர்வதால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புத்திகூர்மையைத் தரும் புதனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் நீங்கள் கும்பத்தில் குரு சஞ்சரிக்க உள்ள இந்த ஐந்து மாத காலத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. கால அளவு குறைவாக உள்ளதால் ஒரு நாளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். சோம்பல் தன்மையை விடுத்து சுறுசுறுப்புடன் செயல்படுபவர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் என்பதும் கைகொடுக்கும். அஷ்டமத்துச் சனி லேசான தடுமாற்றத்தைத் தந்தாலும் குருவின் பார்வை உங்களை பாதுகாக்கும். முன்பின் தெரியாத விவகாரங்களில் அணு அளவும் தலையிடாதீர்கள். அன்பான அணுகுமுறையே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

நிதி : 

குருவின் அனுகூலமான நிலையால் சிக்கன முயற்சிகள் பலன் தருவதோடு சேமிப்பும் உயர்வடையும். குறிப்பாக பிள்ளைகளின் எதிர்காலம் கருதி திட்டமிடும் சேமிப்பு பணிகள் வெற்றி பெறும். வீட்டினில் தங்க நகைகள் சேரும். ம்யூச்சுவல் பண்ட் கைகொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகள் வசூலாகும். நெருங்கிய நண்பர் ஒருவர் நீங்கள் செய்த உதவியை மனதில் கொண்ட கைமாறு செய்வார். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆன்லைன் வர்த்தகம் கைகொடுக்கும். கிரெடிட் கார்டுகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குடும்பம்

குடும்பத்தினர் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போவார்கள். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் அதிக அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணங்கள் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கும். அவர்களோடு அதிக நேரத்தை செலவழிப்பதன் மூலம் அவர்களது மனநிலையை புரிந்துகொண்டு நல்வழிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக துணையிருப்பார். உறவினர்களிடமிருந்து நீங்கள் விலகியிருக்க விரும்பினாலும் அவர்கள் உங்களை விடமாட்டார்கள். எவர் மனமும் நோகக்கூடாது என்பதில் அதிக கவனம் கொள்வீர்கள்.

கல்வி

குருவின் அருளால் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். ஆசிரியர், மாணவர் இடையே உறவு மேம்படும். பிராக்டிகல் வகுப்புகளில் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குரு பகவானின் துணையினால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். அதே நேரத்தில் எழுதும் திறன் குறைவாக இருப்பதால் தேர்வினில் விடையளிக்க நேரம் போதவில்லை என்ற குறை உண்டாகலாம். பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஸியோதெரப்பி, பயோடெக்னாலஜி பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள்

தேவையில்லாத வீண் பேச்சுக்கள் உங்களுக்கு அவப்பெயரைத் தரக்கூடும். நீங்கள் நல்லது என்று நினைத்து பேசும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அதனால் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்திற்கு ஆளாகும் வாய்ப்புண்டு. தம்பதியருக்கிடையே அவ்வப்போது வீண் வாக்குவாதம் காரணமாக கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பிரச்னையின் போது அமைதியாக இருப்பது மட்டுமே வெற்றியைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

உடல்நிலை

நீண்ட நாள் நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவுகளை உடையவர்கள் உரிய சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்வது நல்லது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவது அவசியம். பலவீனம் காரணமாக உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைகடலை சிறிதளவு சாப்பிட்டு வருவது நல்லது.

தொழில்

ஜீவன ஸ்தான அதிபதி ஆகிய குருவின் பார்வையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயரை அடைவீர்கள். அரசாங்க பணியாளர்கள் விரும்பிய பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் அதிக வேகத்துடன் செயல்படுவார்கள். சிறுதொழில் செய்வோர் புதிய நண்பர்களை ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டு தங்கள் தொழிலினை அபிவிருத்தி செய்துகொள்ள முயற்சிப்பர். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகுந்த முன்னேற்றம் காண்பார்கள். உணவுதானிய வியாபாரிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், பால் வியாபரிகள் நல்ல லாபத்தினைக் காண்பர். வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு ஒன்பதாம் வீட்டு குரு உறுதுணையாய் இருப்பார்.

பரிகாரம் :

 சனிதோறும் சிவன் சன்னதியை சுற்றி வந்து வழிபடுங்கள்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES