Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 November 2021

ரிஷபம் :குரு பெயர்ச்சி பலன்கள் 13.11.2021 முதல் 14.04.2022 வரை



ரிஷபம்: உழைப்பே உயர்வு தரும்





கார்த்திகை நட்சத்திரம் 2, 3, 4ம் பாதம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களின் உழைப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமையும். உங்களது இயற்கை குணமான படபடப்பு, அவசரம், முன்கோபத்தை ஓரங்கட்டி வைத்து விடுங்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை கவனம் சிதறாத வகையில் மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

நிதி

கடன்பிரச்னை முடிவிற்கு வராவிட்டாலும் கூட பொருளாதார ரீதியாக ஏற்றம் காண்பீர்கள். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். கையிருப்பில் பணமாக வைத்துக்கொள்ளாது அரசுத் தரப்பு நிறுவனங்களில் சேமிப்பாக வைப்பது நல்லது.

குடும்பம் :

வரும் ஜனவரி முதல் குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் குறையும். உடன்பிறந்தோரின் நலனுக்காக எடுத்து வரும் முயற்சி வெற்றி அடையும். உறவினர் வழியில் உண்டான பிரச்னை தீராமல் இழுபறியாகும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப பெரியவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத செயல்கள் வருத்தம் தரக்கூடும்.

கல்வி :

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி, மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அவசரப்படாமல் நிதானமாக விடையளித்தால் மட்டுமே நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியும்.

பெண்கள் :

குடும்பத்தில் நிலவிய சலசலப்பு தீர குலதெய்வத்தை வழிபடுங்கள். அண்டை வீட்டாரால் இருந்த பிரச்னை
விலகும். கணவரின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு பெரிதும் துணை நிற்கும். கோபத்தையும் உங்கள் எண்ண ஓட்டத்தையும் மனதிற்குள் அடக்கி வைக்காமல் உடனடியாக வெளிப்படுத்திவிடுவது நல்லது.

உடல்நிலை :

உடல்நலனில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கைகால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, பல்வலியால் அவதிப்பட நேரிடும். நவம்பர் இறுதியில் தொற்று நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதால் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் போது உடனுக்குடன் கவனிப்பது நல்லது.

தொழில் :

குருவின் பத்தாம் வீட்டு சஞ்சாரம் நன்மையைத் தரும். உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் சிறிய பிரச்னைகளை சந்திக்கலாம். ஆயினும் சுயதொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்காமல் உண்மையாக உழைத்து வாருங்கள். நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

பரிகாரம் :

மாதந்தோறும் கார்த்திகை விரதம் இருப்பது நல்லது.


ரோகிணி நட்சத்திரம் :
குடும்பத்தில் மகிழ்ச்சி

மனதில் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்களது உண்மையான உழைப்பினை முழு மூச்சோடு வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உங்களது எண்ணம் அடுத்தவர் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெறும்.

நிதி :

பொருளாதார நிலை உயர்வடையும். உங்கள் சேமிப்பினை அரசு நிறுவனங்களில் வைத்துக் கொள்ளுங்கள். தனியார் நிறுவனங்களிடம் கவனம் தேவை. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் வந்து சேரும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து புதிய சொத்து வாங்க முற்படலாம்.

குடும்பம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடத்தும் அறிகுறிகளைக் காண்பீர்கள். சகோதரிகளால் செலவுகளை சந்திக்கலாம். ஆயினும் அவர்களால் ஆதாயமும் உண்டு. உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகம் உண்டாகும் தாயார் வழி உறவுகளுடன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கல்வி :

ஒருமுறைக்கு இருமுறை எழுத்துப்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். வேதியியல், நுண்ணுயிரியல், மரபணுவியல் துறை மாணவர்கள் அபார வெற்றி காண்பர். ஞாபக மறதியால் பிரச்னையை சந்திக்க நேரிடும்.

பெண்கள் :

ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வீண்செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் ஓய்வாக இருக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவதைத் தவிர்க்கவும். கணவரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

உடல்நிலை :

 உடல் உஷ்ண உபாதையால் அவதிப்படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் பரிசோதித்து வருவது அவசியம். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் மனநிலை பாதிப்பு உண்டாகலாம்.

தொழில்

தொழில் ரீதியாக வேலை பளு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்கான முயற்சிக்கு மார்ச் மாதம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்கள் கைகொடுக்கும். சுயதொழில் செய்வோர் நல்ல லாபம் காண்பர்.

பரிகாரம்

பிரதோஷ நாளில் நந்தியம்பெருமான் வழிபாடும் சிவனடியார்களுக்கு அன்னதானமும் செய்து வாருங்கள்.

மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: 

சேமிப்பு அதிகரிக்கும்

உங்களைப் பொறுத்த வரை இந்த குருப்பெயர்ச்சி தொழில்முறையில் சிறிது சிரமத்தினைத் தந்தாலும் இறுதியில் நற்பெயரைப் பெற்றுத் தரும். குருவின் பத்தாம் இடத்து வாசம் உங்களைத் தொழில்முறையில் மேலும் மெருகூட்டும். சிரமப்பட்டு உழைப்பதற்கான நற்பலனை குரு நிச்சயம் தருவார். உங்களின் இயற்கை குணமான வேகமும், பிடிவாதமும் தலையெடுக்கலாம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் முனைப்புடன் செயல்படுவீர்கள்.

நிதி

சேமிப்பு உயரத் துவங்கும். பொருளாதார நிலை உயரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றிக் கொள்ள நிதி நிலை துணைபுரியும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோர் வங்கி சார்ந்த கடனுதவியைப் பெறுவர். வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர் சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

குடும்பம்

குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கி மகிழ்ச்சி குடிபுகும். குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் உங்களுக்கான பொறுப்பு கூடும். தாய்வழி உறவினர்களுக்கு அவ்வப்போது உதவி செய்ய வேண்டியிருக்கும். உடன்பிறந்தோரால் பிரச்னைக்கு ஆளாகலாம்.

கல்வி

மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். செய்முறைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் நீங்கள் எழுத்துத் தேர்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ், பொருளாதாரம், ஜர்னலிஸம், பொலிட்டிக்கல் சைன்ஸ் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

பெண்கள்

குடும்பத்தில் பொறுப்பு கூடும். வேலைபளுவின் காரணமாக மனதில் ஆயாசம் தோன்றும். கணவரின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் சிரமம் காண்பீர்கள். முன்பின் தெரியாத பெண்களின் நட்பால் எதிர்பாராத பிரச்னை வரலாம். ஏமாற்றுக்கார பெண்களின் பிடியில் சிக்கி பொருளிழப்பு உண்டாகலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும்.

உடல்நிலை :

 பணிச்சுமையால் சிலர் முதுகுவலி, தோள்வலி பிரச்னைகளுக்கு ஆளாகலாம். தோல் சம்பந்தமான நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள் நிவாரணம் காண்பர். கால்சியம் குறைபாட்டை சரிசெய்யும் வகையில் தினமும் இரவில் பசும்பால் சாப்பிடுங்கள்.

தொழில்

அரசு பணியாளர்கள் தங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவர். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் அதிக லாபம் பெறா விட்டாலும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றி வெற்றி காண்பர். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை குரு பகவான் நிச்சயம் தருவார். செல்வச் சேர்க்கையில் சிறிதும் குறைவு உண்டாகாது. ஜீவன ஸ்தானத்தில் குரு அமர்வதால் வாழ்க்கைத் தரம் உயரும். உணவு பொருள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல் பொருள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர்.

பரிகாரம்

தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES