Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 November 2021

மேஷம் : குரு பெயர்ச்சி பலன்கள் (13.11.2021 முதல் 14.04.2022 வரை)


மேஷம் : வெற்றி மீது வெற்றி சேரும்



உங்கள் நட்சத்திரம் முறைப்படி 
1.அசுவனி
2.பரணி

அசுவினி: நேர்படப் பேசு

இதுநாள் வரை தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு தற்போது வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் வந்து அமர்வது சிறப்பான நற்பலனைத் தரும். கேதுவை நட்சத்திர அதிபதி ஆகவும் செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு கும்ப குருவின் இந்த ஐந்து மாத காலமும் பொற்காலமாகவே அமையும். அதிலும் குறிப்பாக 31.12.2021 வரை உங்களது ராசிநாதன் ஆகிய செவ்வாயின் சாரம் பெற்று குரு சஞ்சரிக்க உள்ளதால் நினைத்த காரியங்களை தடையில்லாமல் சாதித்து வருவீர்கள். உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தான அதிபதி 11ல் அமர்வதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். நிலுவையில் உள்ள பிதுர்கர்மாக்கள், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை தடையின்றி செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் மனக்குறை நீங்கும். உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

நிதி

தனலாப ஸ்தானத்தில் குருவின் அமர்வு நிதி நிலையை சீராக்கும். நீண்ட நாள் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிதாக கடன் வாங்க யோசிப்பீர்கள். கடன் வாங்காமல் சமாளிக்கும் கலையை கற்றுக் கொள்வீர்கள். மார்ச் 21ம் வரை புதிய சேமிப்பில் இறங்குவதற்கு வாய்ப்பு உருவாகும். ஆன்மிகம் சார்ந்த செலவுகள் கூடும். தான தருமங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வருவாய் சிறப்பாக அமையும். புதிதாக வீடு, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

குடும்பம்

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து நிம்மதியான சூழல் நிலவும். குடும்பத்தினருக்கிடையே உங்கள் வார்த்தைகள் முக்கியத்துவம் பெறும். அனைவரின் நலனுக்காக அதிகமாக அலைவீர்கள். உடன்பிறந்தோருக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வீர்கள். அண்ணன், அக்கா வழியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெற்றோரின் ஆதரவுடன் செயல்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை.

கல்வி

குருவின் அருளால் கல்வித்தரம் உயர்வு பெறும். குறிப்பாக ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவர்கள் தடைகள் நீங்கி வெற்றி காண்பர். அந்நிய தேசம் சென்று உயர்கல்வி பயில விரும்புவோர்க்கு நேரம் சாதகமாக உள்ளது. வணிகவியல் துறை சார்ந்த மாணவர்கள் ஏற்றம் காண்பர். சிஏ படிப்பில் கண்டு வரும் தடைகள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள்.

பெண்கள்

கணவரின் உடல்நிலையில் கவனம் தேவை. பேசும்போது தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பிரயோகிப்பீர்கள். குடும்பப் பிரச்னைகளில் உங்கள் வாதம் எடுபடும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த விரிசலை சரி செய்வீர்கள். மகப்பேறுக்காக காத்திருப்போருக்கு சாதகமான நேரம். குடும்பப் பெரியவர்களின் ஆதரவுடன் சாதிப்பீர்கள்.

உடல்நலம் :

ரோக ஸ்தானத்தில் இருந்து குருவின் பார்வை விலகுவதால் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். தொற்று நோய்கள், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு கணையம், கல்லீரல் பகுதிகளில் சிரமம் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு. அவ்வப்போது தண்ணீர் பருகுவதும் சிறுநீர் கழிப்பதும் உடல்நலனை மேம்படுத்தும்.

தொழில்

பத்தில் சனியின் ஆட்சி பலமும் பதினொன்றில் குருவின் அமர்வும் இரண்டில் ராகுவும் உள்ளதால் தொழில்முறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். உறுதியான செயல்பாடும் உண்மையான உழைப்பும் நல்ல லாபத்தினைப் பெற்றுத் தரும். வண்டி, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், ராணுவம், காவல்துறையினர், நீதித்துறையினர் தங்கள் உத்யோகத்தில் விருது பெறுவார்கள். சுயதொழில் செய்வோரில் இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், சமையல் கலைஞர்கள், உணவுத்துறை, சித்த மருத்துவம் ஆகியவற்றில் இருப்போர் அமோக லாபம் காண்பர்.

பரிகாரம்

திங்களன்று விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.


பரணி நட்சத்திரம் : 

மெல்லத் தெரிந்து சொல்

வெற்றியைத் தரும் ஜெய ஸ்தானத்தில் குருவின் வரவு உங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியங்கள் எளிதாக நடைபெறுவதாக உணர்வீர்கள். செவ்வாயை ராசிநாதன் ஆகவும் சுக்ரனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் வேகமாகச் செயல்பட்டாலும் நிதானம் தவறாமல் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் அளப்பறிய நன்மை காண்பீர்கள். வலைதளம், சோஷியல் மீடியா ஆகியவற்றை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வெளிநாடு வாழ் நண்பர்கள் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதே நேரத்தில் நல்லவர்கள் யார் தீயவர்கள் யார் என்பதை பிரித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கும்ப குருவின் இந்த ஐந்து மாத காலமும் உங்கள் வளர்ச்சியை உறுதி செய்கிறது.

நிதி

டிச. 31 முதல் நிதி நிலையில் ஏற்றத்தைக் காண்பீர்கள். சேமிப்பு உயர்வடையும். அதே நேரத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சிறு வியாபாரத்தில் பேரம் பேசும் நீங்கள் பெரிய வியாபாரத்தில் கோட்டை விடுவீர்கள். கேஷ் பேக் விளம்பரங்களால் கவரப்பட்டு தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீண்விரயம் உண்டாகலாம். கவனம் தேவை. மார்ச் மாத இறுதியில் எதிர்கால நலன் கருதி புதிய சேமிப்பில் இறங்கும் வாய்ப்புண்டு. தங்கம், வெள்ளியினால் ஆன பொருட்கள் சேரும்.

குடும்பம் :

 குடும்பத்தில் சலசலப்போடு கலகலப்பும் கலந்திருக்கும். தம்பதியருக்குள் இணக்கம் கூடும். பெரியவர்களின் ஆலோசனை பயன் தரும். உடன்பிறந்தோரின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். சகோதரியின் குடும்பத்தாருக்கு பலன் கருதாமல் உதவி செய்ய முற்படுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பீர்கள்.

கல்வி

குருவின் திருவருளால் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். ஆன்லைன் வகுப்புகளால் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் ஆசிரியரின் தனிப்பட்ட ஆதரவோடு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இயற்பியல், கணிதம், அக்கவுண்டன்சி, வரலாறு, மொழி இலக்கியம் ஆகிய துறை சார்ந்த மாணவர்கள் சாதிப்பார்கள். மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

பெண்கள்

பொறுப்புடன் செயல்பட்டு வரும் நீங்கள் பேச்சினில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அண்டை வீட்டுப் பெண்களிடம் அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆதரவு இருப்பதால் தங்கு தடையின்றி உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிறந்த வீட்டாருடன் இருந்து வந்த மனக்கசப்பு காணாமல் போகும். மார்ச் மாதம் நான்காம் வாரம் முதல் மனதில் தேவையற்ற குழப்பங்கள் முளைக்கக் காண்பீர்கள்.

உடல்நலம்

உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு பிரச்னை உள்ளவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாவார்கள். ஒரு சிலருக்கு கண்பார்வை கோளாறு, கடுமையான தலைவலி ஆகியவை உண்டாகும். கொரோனாவால் தடைபட்டு வந்த மருத்துவ சிகிச்சைகளை மீண்டும் மேற்கொள்ள ஏதுவான காலமாக அமையும். அறுவை சிகிச்சைகள் இந்த நேரத்தில் வெற்றி தரும் என்பதால் பயமின்றி இறங்கலாம்.

தொழில் :

 அரசாங்க பணியாளர்கள் நேர்மையான முறையில் பதவி உயர்வு பெறுவார்கள். சுயதொழில் செய்வோர் உழைப்பிற்கேற்ற ஊதியம் காண்பர். வியாபாரிகள், தொழிலதிபர்கள் பணியாட்களின் நலனில் அக்கறை கொள்வர். ரியல் எஸ்டேட், தரகு, கமிஷன் ஏஜன்சி, தங்க நகை வியாபாரம், தரை வழி போக்குவரத்து, எலக்ட்ரானிக்ஸ் துறை, மருத்துவ செவிலியர் துறை பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். மார்ச் மாத இறுதியில் பங்குதாரர்கள் வழியில் பிரச்னை உருவாகலாம் என்பதால் கூட்டுத்தொழிலில் சிறப்பு கவனம் தேவை.

பரிகாரம் :

 செவ்வாய்தோறும் மாரியம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

கார்த்திகை 1ம் பாதம்
சொல்வது தெளிந்து சொல்
எதிலும் அவசரபட்டு செயல்படும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சியின் காலத்தில் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்ற முடிவிற்கு வருவீர்கள். ஆயினும் எல்லோருக்கும் முன்பாக நாம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற அவசர குணம் மனதில் ஆழப் பதிந்திருக்கும். அநாவசியமான ஆசைகள் மனதை விட்டு அகலும். எது நமக்கு தேவை, தேவையில்லை என்பதை பிரித்து அறிந்து கொள்வீர்கள். பேச்சினில் கடமையுணர்வு அதிகமாக வெளிப்படும். கடந்த காலத்தில் கண்ட அனுபவம் உங்களை பக்குவப்படுத்தும். தைரியமும் மன உறுதியும் கூடும். இறங்கிய பணிகளில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு நினைத்தது நடக்கும் நேரமிது.

நிதி

குருவின் லாப ஸ்தான சஞ்சாரத்தால் நல்ல தனலாபம் கிடைப்பதோடு ஸ்தான பலமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை ஆகியன வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்தினை விற்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிய சேமிப்புகளில் ஆர்வம் பிறக்கும். மியூச்சுவல் பண்ட்ஸ், ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் அதிக கவனம் தேவை. பேராசை பெருநஷ்டம் என்பதை உணர்ந்து முதலீடு செய்யுங்கள்.


குடும்பம்

உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். சுபநிகழ்ச்சிகளில் முன் நின்று செயல்படுவீர்கள். உறவினர் ஒருவரின் வருகை குடும்பத்தில் சலசலப்பை உண்டாக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை தேடி வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் வெற்றியைத் தரும்.

கல்வி

மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபகமறதி பிரச்னை நீங்கும். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லுாரிகளில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். வேதியியல், மருத்துவம், எலக்ட்ரிகல், கேட்டரிங் டெக்னாலஜி துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள்.

பெண்கள்

குடும்பப் பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். குடியிருக்கும் வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். வீட்டினில் தங்கம், வெள்ளியிலான பொருட்கள் சேரும். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது நிர்வாகத் திறன் வெளிப்படும். அடுத்த வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்யப்போய் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். கணவரின் பணிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பீர்கள். பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி நற்பெயர் காண்பீர்கள்.

உடல்நலம்

டிசம்பர் 31 வரை உடல்நிலையில் ஒரு சில உபாதைகளை சந்திக்க நேரிடும். தைராய்டு, கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உணவுக் கட்டுப்பாடு என்பது உடல்நலத்திற்கு நல்லது. உடல்சூடு அதிகமாவதால் ஒரு சிலருக்கு கண்களில் இருந்து நீர் வடியக்கூடும். கவனம் தேவை.

தொழில் :

அரசுப் பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த லாபத்தினை அடைவார்கள். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள்.

பரிகாரம்

புதனன்று சரஸ்வதியை வழிபடுங்கள்.


சுபம்


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES